குற்றம்

லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?

Sinekadhara

நடுக்கடலில் இரண்டு கடத்தல் படகுகளை மடக்கிப்பிடித்து 218 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடலோர பாதுகாப்புப்படை மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை கைப்பற்றியுள்ளன. லட்சத்தீவு அருகே வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டு கைமாற்றப்பட்டபோது இந்த போதைப்பொருள் பிடிபட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடலோர பாதுகாப்புப்படை மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை கூட்டு நடவடிக்கையில், தமிழக கடல் பகுதியிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் "பிரின்ஸ்" மற்றும் "லிட்டில் ஜீசஸ்" ஆகிய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் கடத்தி வரப்பட்ட ஹெராயின் கொச்சி கொண்டு செல்லப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் சர்வதேச சந்தையில் 1526 கோடி ரூபாய் மதிப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் 218 கிலோ ஹெராயின் பொட்டலங்கள் பிடிபட்டதாக, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து படகுகள் நடுக்கடலுக்கு வந்து ஹெராயின் போதைப்பொருளை கடத்திச் செல்லும் என வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்ததாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடலோர பாதுகாப்புப்படை மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை தொடர்ரோந்தில் ஈடுபட்டு சந்தேகத்துக்குரிய வகையில் பயணித்துக்கொண்டிருந்த படகுகளை பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு சட்டப்படி தற்போது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கொச்சியில் உள்ள கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்தில் பிடிபட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணை தொடர்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- கணபதி