அகமதாபாத்தில் 21 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திர தினத்தன்று இரவு அந்தப் பெண் தனது தாயாரை சந்திக்கச் சென்றுள்ளார். அவர் ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி தனது வீட்டில் விடுமாறு கூறியிருக்கிறார். ஆட்டோவை ஓட்டிவந்த நபர் அந்தப் பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்தபிறகு, அந்தப் பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு சென்றனர். இந்த சம்பவம் நடந்த இரண்டு நாள் கழித்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி குடும்பத்தாரால் கொடுக்கப்பட்ட வழக்கின்பேரில் போலீஸார் விசாரித்ததில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கடந்த மூன்று வருஷங்களாக போக்குவரத்துப் படை காவல்துறையில் இருப்பவர் எனத் தெரியவந்தது.
இதனால் அவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார். முதலில் வெள்ளிக்கிழமை இரண்டுபேரை கைது செய்து கொரோனா சோதனைக்கு உட்படுத்தி, நெகட்டிவ் என வந்ததை அடுத்து சனிக்கிழமை மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தியபிறகு, காவலர் உட்பட மூன்று பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற இரண்டு பேர் இப்போது காவல்துறை விசாரிப்பில் உள்ளதாக ஒரு காவல் அதிகாரித் தெரிவித்துள்ளார்.