குற்றம்

அப்பா, அக்காவை கொலைசெய்த மனநோயாளி- துணை நடிகையின் குடும்பத்தில் சோகம்

webteam

சென்னை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரொருவர், தனது தந்தை மற்றும் அக்காவை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆல்ட்ரன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சாந்தி சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் துணை நடியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு ராஜேஷ், பிரகாஷ் ஆகிய இரண்டு மகன்களும் பெட் ரிஷா பாவ பிரியா என்ற ஒரு மகளும் உள்ளனர். மூன்று பிள்ளைகளில் மூத்த மகன் ராஜேஷ் மற்றும் மகள் பிரியா ஆகியோர் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். பெற்றோர் செல்வராஜ், சாந்தியுடன் பிரகாஷ் வசித்து வந்துள்ளார்.

டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்த பிரகாஷ், மது மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சையும் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரகாஷ் நேற்று தாய் தந்தையுடன் சண்டையிட்டு கத்தியை வைத்து பெற்றோரை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் தாய் சாந்தியை வீட்டிலிருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளார். இதில் சாந்திக்கு கழுத்தில் லேசான சிராய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர் இருவரும் பிரகாஷை ஒருவழியாக சமாளித்து வீட்டின் ஒரு அறையில் அவரை அடைத்து வைத்துள்ளனர். பின் அவருக்கு மருந்துகள் வாங்க சாந்தி மட்டும் மருத்துவமனை சென்றுள்ளார். அப்போது வீட்டில் செல்வராஜ் மட்டும் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் தந்தை செல்வராஜை ஏமாற்றி அறையிலிருந்து வெளியே வந்த பிரகாஷ், சமையலறையில் வைத்திருந்த கத்தியை வைத்து செல்வராஜின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் யாருக்கும் தெரியாமல் வீட்டை பூட்டிய பிரகாஷ், கத்தியுடன் அருகே உள்ள அக்கா பிரியா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து அக்காவையும் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து பிரகாஷ் தப்பி சென்றிருக்கிறார். இதனை தொடர்ந்து பிரியாவின் வீட்டருகே இருந்தவர்கள், உயிரிழந்த பிரியாவின் கணவர் மிதுன் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே  தந்தை செல்வராஜூம் கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து செல்வராஜின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், வீட்டின் அருகே சுற்றி திரிந்த பிரகாஷையும் கைது செய்தனர். மாங்காடு பகுதியில் மகனே தந்தையையும் அக்காவையும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.