கல்லூரி மாணவர் உட்பட இருவர் கொலை pt desk
குற்றம்

மயிலாடுதுறை | சாராய விற்பனையை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவர் உட்பட இருவர் கொலை – 2 பேர் கைது

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலரை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை அருகே முட்டம் வடக்கு தெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இதை தட்டிக் கேட்பவர்களை அடித்தும் கொலை மிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றது.

அப்போது சாராய வியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்த நிலையில், நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட கல்யாண் குமார் என்பவரின் மகன் ஹரிஷ் (25) மற்றும் பேச்சாவடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் கல்லூரி மாணவன் ஹரிசக்தி (20) ஆகியோரை சாராய வியாபாரிகளான ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த இருவரும பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராஜ்குமார் தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார் மூவேந்தனை தேடி வருகின்றனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே உறவினர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.