மயிலாடுதுறை அருகே கிராம நாட்டாமை பிரச்னை தொடர்பாக சொந்த தம்பியை கத்தியால் குத்தி படுகொலை செய்த அண்ணன் மற்றும் அண்ணன் மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சிவனாரகரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் செந்தில்குமார் (50). விவசாயியான இவர், ஒருவருடத்துக்கும் மேலாக அப்பகுதியில் நாட்டாண்மையாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும், அதே கிராமத்தல் நடுத்தெருவில் வசிக்கும் இவரது சொந்த அண்ணன் பாண்டியன் (55) என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு மேலாகியும் நாட்டாண்மையை மாற்றாதது தொடர்பாகவும், பாண்டியன் வீட்டின் அருகில் வடக்குமலையான் கோயில் கட்டுவது தொடர்பாகவும் பிரச்னை இருந்து வந்தது.
அந்த இடம் பாண்டியனின் புழக்கத்தில் இருந்ததால் அங்கு கோயில் கட்டுவதற்கு பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு நடுத்தெருவிற்கு வந்த செந்தில்குமாரை பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமார் (26) ஆகியோர் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றி பாலையூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பாண்டியன் மற்றும் சந்தோஷ்குமாரை ஆகிய இருவரையும் கைது செய்தனர். கிராம நாட்டாண்மை பிரச்னை, இடப் பிரச்னை தொடர்பாக சொந்த தம்பியையே கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.