குற்றம்

மயிலாடுதுறை: குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்... அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி

webteam

மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர், மண்தாங்கி திடல் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகள் ரம்யா(29). இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு கம்பெனியில் பணியாற்றியபோது அங்கு பணிபுரிந்த திருநெல்வேலி வள்ளியூர் கூத்தங்குடி பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் குமார் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் குமார் தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்வதும், கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வதுமாக இருந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் குமார் பட்ட கடனை ரம்யா மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு அடைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரவு, குமார் குடிபோதையில் ரம்யா வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து அவர் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த ரம்யா அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன் வழக்கு பதிந்து, ரம்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.