திருடர்கள்
திருடர்கள் PT
குற்றம்

தாம்பரம்: ஒரே இரவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள்; அதிமுக நிர்வாகி வீட்டிலும் கைவரிசை!

PT WEB

தாம்பரம் பகுதிகளில் தலையில் குல்லா அணிந்து கொண்டு வீடுகளில் புகுந்து நகை பணம் கொள்ளை அடிப்பதோடு இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு செல்லும் கும்பலாம் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னை அடுத்த தாம்பரம் கஸ்தூரிபாய் நகர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த ஆறு பீரோக்களை உடைத்து அதிலிருந்து நகை பணத்தை கொள்ளையடித்தனர்.

இதன் பின்னர் அதே பகுதியில் வ.உ.சி குறுக்கு தெருவில் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்ட கொள்ளையர்கள் அங்கே தனியார் பள்ளி ஆசிரியர் ராஜேஷ் என்பவரின் இரு சக்கர வாகனத்தை திருடி கொண்டு தப்பி சென்றனர். கொள்ளையர்கள் தலையில் குல்லா அணிந்து கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் அந்தப் பகுதியில் இருந்த வீடுகளில் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இதே போல ஜாகிர் உசேன் தெருவில் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். ஒரே இரவில் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் கொள்ளையர்கள் மூன்று இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் திருடிய இருசக்கர வாகனத்துடன் குரோம்பேட்டைக்கு சென்று குரோம்பேட்டை நியூ காலனி 11-வது குறுக்கு தெருவில் அதிமுக பிரமுகர் பெருமாள் என்பவர் வீட்டில் கொள்ளை அடித்துள்ளனர். பெருமாள் முதல் தளத்தில் குடும்பத்தினரும் தூங்கிக் கொண்டிருக்க கீழ்தளத்தில் அவருடைய தாயார் தங்கி இருந்த நிலையில், அவர் தாயார் மறைமலை நகர் சென்றதால் பெருமாள் பூட்டிவிட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

காலையில் மாடி கதவை திறக்க முயன்ற போது வெளியில் தாழ்ப்பால் போடப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து கதவை திறந்து கொண்டு கீழே வந்து பார்த்தபோது வீட்டின் கீழ் தள கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 12 சவரன் நகை வெள்ளி குத்துவிளக்கு லேப்டாப் டேப், போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைநடத்தி, அந்தப் பகுதியில் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது தாம்பரத்தில் கொள்ளை சம்பவங்கள் ஈடுபட்ட அதே கொள்ளையர்கள் இங்கு திருடிய இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது தாம்பரம் குரோம்பேட்டை பகுதியில் ஒரே நேரத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.