குற்றம்

மானாமதுரை: பேத்திக்கு பாலியல் வன்கொடுமை - தாத்தா போக்சோவில் கைது

kaleelrahman

மானாமதுரை அருகே பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக தாத்தா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டத்தரசி கிராமத்தில் வசித்து வருபவர் ராசு (64). இவர் தன்னுடைய 13 வயது, சொந்த பேத்தியை கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அச்சிறுமிக்கு தொடர்ந்து வாந்தி மற்றும் உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமியின் தாத்தா ராசு தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து புகாரின் பேரில் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாத்தா ராசுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.