குற்றம்

காதலியை சந்திக்க வெளிநாடு டூர் - மனைவியிடம் மறைக்க பாஸ்போர்ட் பக்கத்தை கிழித்தவர் கைது

JustinDurai

கள்ளக்காதலியை சந்திப்பதற்காக வெளிநாடு சென்றதை மனைவியிடம் மறைப்பதற்காக பாஸ்போர்ட்டில் இருந்து சில பக்கங்களை கிழித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மும்பையைச் சேர்ந்த 32 வயதான திருமணமான இளைஞர் ஒருவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. சமீபத்தில் அவர் அந்த பெண்ணை சந்திப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். கடந்த வியாழன் இரவு அவர், இந்தியாவுக்கு திரும்பியபோது, மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது அதில் சில பக்கங்களைக் காணாதது குறித்து அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் மனைவியிடம் வேலை காரணமாக வெளிமாநிலம் செல்வதாக கூறிவிட்டு, தனது கள்ளக்காதலியை சந்திக்க வெளிநாடு சென்றதும், அதனை தனது மனைவி தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்களை கிழித்து அகற்றியதும் தெரியவந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தெரிந்தே சேதப்படுத்துவது குற்றம் என்பதால் போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: கொலையை தற்கொலையாக மாற்றிய இன்ஸ்பெக்டர் - திருச்செந்தூரில் பணியிடை நீக்கம்