குற்றம்

ஆன்லைன் சூதாட்ட மோகம்; மனைவியின் 30 சவரன் நகைகளை விற்ற காதல் கணவன்

Sinekadhara

சேலத்தில் தன்னுடைய 30 சவரன் நகைகளை விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த நிலையில், போலி நகைகளை செய்துவைத்து  மோசடி செய்துவிட்டதாக காதல் கணவன் வீட்டின் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியும், கண்ணந்தேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டனும் கடந்த 2014ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி ஈரோட்டில் வசித்துவந்த நிலையில், தமிழ்ச்செல்வியின் குடும்பத்தினருடன் சமரசம் செய்து 30 சவரன் நகைகளை வரதட்சணையாக பெற்றதாகக் கூறப்படுகிறது.

முறையாக வேலைக்கு செல்லாத மணிகண்டன் ஆன்லைன் சூதாட்ட மோகத்தில் சிக்கியிருக்கிறார். கையிலிருந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த மணிகண்டன், தன் மனைவி பெற்றோர் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவரது நகைகளை எடுத்து விற்று அந்த தொகையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு மேலும் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார்.

இதனை மறைக்கும் விதமாக போலி நகைகளை செய்து வீட்டில் வைத்து மோசடியில் ஈடுபட்டதாகவும் மனைவி தமிழ்ச்செல்வி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவனின் இந்த பொறுப்பற்ற செயலால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி நேற்று நகைகளை திரும்பக் கேட்டு கொங்கணாபுரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.