பெங்களூர் தந்தை - மகள்
பெங்களூர் தந்தை - மகள் முகநூல்
குற்றம்

கர்நாடகா: பட்டியலின இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு: தூங்கிய மகளின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை!

ஜெனிட்டா ரோஸ்லின்

பெங்களூரு புறநகர் பகுதி தேவனஹள்ளி தாலூகாவில் உள்ள பிடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கு கவானா மற்றும் கீர்த்தனா என்ற 2 மகள்கள் இருந்தனர். இந்நிலையில் மகள் கவானாவுக்கு முகுந்த் என்பவருன் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார் மஞ்சுநாத். இந்நிலையில், தான் ஏற்கனவே வேறு ஒரு இளைஞரை (பட்டியலினத்தைச் சேர்ந்தவர்) காதலிப்பதாக கூறியுள்ளார் கவானா. தன்னுடைய மகள் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை காதலிப்பதா என்று கண்டித்த தந்தை, முகுந்த்-ஐ தனது இளைய மகள் கீர்த்தனாவுக்கு மணம் முடித்துள்ளார்.

இந்நிலையில், கணவருடன் வாழத்தொடங்கிய கீர்த்தனா, அவருடன் சண்டையிட்டு தந்தை வீட்டுக்கு வந்து வாக்குவாதம் செய்துள்ளார். கணவன் தன்னை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இத்தனை நடந்த பின்னரும், மகளுக்கு ஆதரவு கொடுக்க தந்தை மஞ்சுநாத் மறுத்த நிலையில் என்.ஜி.ஓவை அணுகியுள்ளார் கீர்த்தனா. இதனால் மஞ்சுநாத் வீட்டுக்கே வந்த என்.ஜி.ஓ அதிகாரிகள், அவரை எச்சரித்துவிட்டு திரும்பி சென்றுள்ளனர்.

நடந்த இந்த பிரச்சனை அனைத்திற்கும் மூத்த மகள்தான் காரணம் என்று எண்ணிய மஞ்சுநாத், அவருடன் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் தன்னுடைய மகளையே கொலை செய்ய அவர் முடிவெடுத்துள்ளார். இரவு நேரம் ஆன நிலையில், அதிகாலை 3 மணிக்கு தனது மூத்த மகள் தூங்கி கொண்டிருந்தபோது அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் மஞ்சுநாத்.

இதனைத் தொடர்ந்து, விஸ்வநாதபுரம் போலீசில் சரணடைந்த அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விஷயம் தெரிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார் கவானா. இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீஸ், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணையை தொடங்கியுள்ளனர்.