குற்றம்

மனைவி, 3 குழந்தைகளை கொலைசெய்துவிட்டு கணவர் தற்கொலை - சந்தேகத்தால் விபரீதம்

webteam

உத்திரபிரதேசத்தில் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேச மாநிலம், கஜியாபாத், மசூரி கிராமத்தை சேர்ந்தவர் 37 வயதான பிரதீப். இவரது மனைவி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு 8 வயது, 5 வயது, 3வயது முறையே மூன்று குழந்தைகள் இருந்தனர். 

இந்நிலையில் இன்று காலை பிரதீப்பின் உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பிரதீப் உட்பட 4 பேர் இறந்த நிலையிலும் கடைசி குழந்தை மட்டும் படுகாயத்துடனும் கிடப்பதை கிடப்பதை கண்டு போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். 

தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் பிரதீப்பின் வீட்டிலிருந்து அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் மீட்டனர். அதில், பிரதீப்பின் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டேன் என எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் பிரதீப் அவரது மனைவியையும் குழந்தைகளையும் கொல்வதற்கு டேப்பை பயன்படுத்தியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் கூறுகின்றனர். 

கொலை செய்யும் போது பிரதீப் போதையில் இருந்துள்ளார் எனவும் தனது குடும்பத்திற்கு முதலில் விஷத்தை கொடுத்துவிட்டு பின்னர் டேப்பை சுற்றி கொலைசெய்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.