சென்னை சைதாப்பேட்டையில் காவலாளி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (46). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மேற்கு சைதாப்பேட்டை, பழைய மாம்பலம் சாலையைச் சேர்ந்த செல்வி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் மேற்கு சைதாப்பேட்டையிலேயே ஒன்றாக கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தனர். இது செல்வியின் மகனான வேலாயுதத்திற்கு பிடிக்கவில்லை. அடிக்கடி முனியாண்டியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அதேபோல் நேற்று இரவும் சண்டை நடந்துள்ளது. அப்போது வேலாயுதம் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வீட்டில் இருந்த முனியண்டியை கத்தியால் குத்தினார். அவர்களிடம் இருந்து தப்பித்த முனியாண்டி தெருவில் ஓடியுள்ளார். ஆனால் வேலாயுதமும் அவரது நண்பர்களும் அவரை துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமரன் நகர் போலீசார் முனியாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.