மதுரையில் செல்லூர் ராஜுவின் ஆதரவாளர், சொத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான சொத்தை செல்லூர் ராஜுவின் ஆதரவாளர் எனக் கூறப்படும் முத்துகிருஷ்ணன் அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மேலும் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி மாரிமுத்து, அவரது தாய், மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருகில் இருந்த காவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தி அவரை குடும்பத்துடன் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், தனது உறவினரான முத்துகிருஷ்ணனிடம் நீண்ட நாட்களாக பணியாற்றிய நிலையில், தனது தந்தை பெயரில் அனுப்பானடியில் இருந்த 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அப்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜுவின் பெயரைச்சொல்லி முத்துகிருஷ்ணன் மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாகக் கூறியுள்ளார்.
மேலும் அதிமுக ஆட்சி நடைபெற்றதால் தன்னால் எதுவும் செய்ய இயலாத நிலையில் ஏற்கெனவே தற்கொலை முயற்சிசெய்து மீண்டுவந்த நிலையில், எனது சொத்துக்களை அவரிடம் கேட்டபோது கொலைசெய்து விடுவதாக மிரட்டுவதால் எனது சொத்துக்களை மீட்டு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.