குற்றம்

பட்டியலின மாணவரை கையால் மலம் அள்ள வைத்த விவகாரம் : ஒருவர் கைது

webteam

பென்னகரம் அருகே பட்டியலின மாணவனை இழிவாக பேசி கையால் மலம் அள்ள வைத்த சம்பவத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னகரம் அருகே கோடாராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அறிவரசன். பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 15 ஆம் தேதி மாலை அறிவரசன் இயற்கை உபாதையை கழிக்க, அருகே இருந்த விவசாய நிலத்தில் உள்ள முட்புதருக்குள் சென்றுள்ளார்.

அதைப் பார்த்த வேறு சமூகத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அந்த மாணவனின் சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாகத் திட்டி கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. மேலும், மலத்தை கையால் வாரிக்கொண்டு போய் வேறு இடத்தில் வீசு என்று தொடர்ந்து அந்த மாணவனை மூங்கில் கம்பால் அடித்து துன்புறுத்தி உள்ளார். மாணவன் அடி பொறுக்காமல் இரண்டு கையால் மலத்தை அள்ளி எடுத்து, அருகில் உள்ள ஏரியில் வீசி உள்ளார்

இதை அறிந்த பெற்றோர்கள், பென்னகரம் காவல் நிலையத்தில் ராஜசேகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர். ஆனால் காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்பட்டது. மேலும் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தியதால் காவல்துறையினர் ராஜசேகர் மீது எஸ்,சி., எஸ்டிக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையமும் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராஜசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.