குற்றம்

சேலம்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய 40 வயது நபர் போக்சோவில் கைது

கலிலுல்லா

ஓமலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிய 40 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தின்னப்பட்டி கிராமம் ரெட்டியூர் காலனியை சேர்ந்தவர் 40 வயதான மாதேஷ். இவர் கொத்தனாராக கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், சிறுமியின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்து, நடந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து இந்த புகார் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் இந்திரா நடத்திய விசாரணையில், ரெட்டியூர் காலனியை சேர்ந்த மாதேஷ், சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து அவ்வபோது பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாதேஷ் மீது வன்கொடுமை செய்தல், துன்புறுத்துதல், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.