செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாநகர் ஆனையூர் தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி (34) இவர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் மீது காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே பகுதியில் அழகு பாண்டியின் வீட்டின் அருகே நடராஜன் (75) என்ற ஓய்வு பெற்ற தலைமை காவலர் தனியாக வசித்து வருவதோடு மளிகை கடை ஒன்றையும் நடத்தி வந்தார்.
இதனிடையே அவ்வப்போது அழகுபாண்டி, மது குடிப்பதற்க்காக நடராஜனிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை தனது கடையில் இருந்த நடராஜனிடம் அழகுபாண்டி மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் அழகு பாண்டியை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.
இதில், மயங்கி விழுந்த அழகு பாண்டியை, கம்பி உள்ளிட்டவற்றால் கொடூரமாக தாக்கி ஆயுதத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்று நடராஜன் சரணடைந்தார் அழகு பாண்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அழகு பாண்டி சடலமாக கிடந்துள்ளார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.