குற்றம்

மதுரை: இளம்பெண் எரித்துக் கொலை – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

kaleelrahman

மேலூர் அருகே இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரே கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் கடந்த 29-ஆம் தேதி இளம்பெண் ஒருவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.

முகம் மற்றும் உடல் பாதி சிதைந்த நிலையில் இருந்ததால் இறந்த பெண் யார் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மாயமான பெண்கள் குறித்த பட்டியலை போலீசார் ஆராய்ந்து விசாரணையை துவக்கினர்.

இதைத்தொடர்ந்து உயிரிழந்தது நத்தம் அருகேயுள்ள குட்டுபட்டியைச் சேர்ந்த ராசாத்தி என்பது துப்பு துலக்கியதில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ராசாத்தியின் கணவர் அர்ச்சுனன் கொலை செய்ததும், இதற்கு அர்ச்சுனனின் பெற்றோர் ராசு - அரியம்மாள் மற்றும் உறவினர்கள் வல்லான், சிவலிங்கம் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த கொட்டாம்பட்டி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.