டவுசர் கொள்ளையர்கள் pt desk
குற்றம்

மதுரை | பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுத் திருடும் டவுசர் கொள்ளையர்கள் - இருவர் அதிரடியாக கைது

நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்கள் இருவரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக இரவு நேரங்களில் டவுசர் அணிந்தும், குரங்கு குல்லா அணிந்தும் வரும் இரண்டு பேர் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் டவுசர் அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

கைது

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை மற்றும் சமயநல்லூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஈரோடு மாவட்டம் பனையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா மற்றும் சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிராமத்தைச் சேர்ந்த முனியன் மகன் மருதுபாண்டி என்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.