குற்றம்

மதுரை: கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது - ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

நிவேதா ஜெகராஜா

மதுரை மாவட்டத்தில் பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர் ஆகிய பகுதிகளிலும் மற்றும் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதிகளிலும் பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளை உடைத்து உள்ளே இருக்கும் பணம், நகை மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடப்பதாக அதிக வழக்குகள் பதிவிடப்பட்டு வந்தது.

இந்த திருட்டு குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாகவும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விதமாகவும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்த விசாரணையில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் துணிகர திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட எஸ்.பாரைப்பட்டியை சேர்ந்த ராஜாக்கனி, சுந்தரம், மற்றும் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1,10,000 பணம் மற்றும் 28 பவுன் நகை, நான்கு எல்இ.டி டிவிக்கள், 3 மொபைல் போன்கள், ஒரு லேப்டாப் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் என ரூ.7 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை நேரில் அழைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்கள். மேலும், மதுரை மாவட்டத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், எச்சரித்து உள்ளார்.