குற்றம்

மதுரை: மாணவனை பிரம்பால் அடித்த தலைமையாசிரியர்... இறுதியில் மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

webteam

மதுரையில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததில், அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டிலயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவனின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் தாடையம்பட்டி மாணிக்கம் (43) சசிகலா தம்பதியினரின் மூத்த மகனான நாகராஜ் அதே ஊரில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மாணவன் பிரபுவின் முழங்காலிற்கு பின்புறத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் வலியுடன் இருந்துள்ளார். அப்போது மாணவனிடம் பெற்றோர் கேட்டபோது, நமது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார் யார் சிகரெட், பீடி குடிக்கிறார்கள் என தலைமை ஆசிரியர் பிரபு கேட்டதாகவும், அதற்கு நான் தெரியாது என கூறியதால் தலைமை ஆசிரியர் பிரபு மூங்கில் பிரம்பால் காலில் அடித்ததால் கடுமையான வலி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து உசிலம்பட்டி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். அப்போது காலின் நரம்பில் காயம் பட்டதால் சதைப்பகுதிக்குள் சீல் வைத்துள்ளது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மாணவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் எழுமலை காவல்துறையினர் தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிகிச்சைக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மாணவன் காலில் செய்த அறுவைசிகிச்சையால் நடமாட முடியாமல் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலயே முடங்கியுள்ளார். இதனால் தனது மகனை அடித்து காயம் ஏற்படுத்தி தற்போது செயல்படாமல் படுக்கையிலயே இருக்கும் அளவிற்கு தாக்கிய தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என மாணவனின் பெற்றோர், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய பெற்றோர், எனது மகனை தலைமை ஆசிரியர் தாக்கியதால் தற்போது அறுவை சிகிச்சை செய்து முடங்கி கிடக்கிறார். அவனால் நடக்ககூட முடியவில்லை, எனவே இதற்கு காரணமான தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.