குற்றம்

மதுரை: குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட மகன் - அடித்துக் கொலை செய்து எரித்த பெற்றோர்

kaleelrahman

மதுரையில் அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்த மகனை அடித்துக் கொலை செய்து எரித்த தாய் தந்தை கைது செய்யப்பட்டனர்.

மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்று பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் உடல் அடித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கு முட்டையுடன் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது, தகவல் அறிந்து அங்கு வந்த கரிமேடு காவல்துறையினர்,

உடலை கைப்பற்றி இறந்தவர் யார்? எதற்காக எரித்துக் கொலை செய்யப்பட்டார் என தடயவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து கரிமேடு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை ஆரப்பாளையம் மறவர் தெரு பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதி சைக்கிளில் சாக்கு மூட்டையில் மர்மமான பொருளை எடுத்து செல்வது குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்ட நபர் மணிமாறன் (42) என்பது தெரியவந்தது, திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், குடிபோதையால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மணிமாறன் அடிக்கடி குடித்துவிட்டு தாய் தந்தையிடம் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.

வழக்கம்போல் நேற்று இரவு குடித்துவிட்டு வந்து தாய் தந்தையிடம் மணிமாறன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தந்தை முருகேசன் மற்றும் தாய் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் சேர்ந்து குடிபோதையில் இருந்த மணிமாறனை கட்டை மற்றும் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்னர்.

பின்னர், உடலை சாக்கு மூட்டையில் கட்டி சைக்கிளில் எடுத்துச் சென்று ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பகுதியில் போட்டு எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மகனை கொலை செய்த தாய் தந்தை இருவரையும் கைது செய்த கரிமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.