குற்றம்

மதுரை: பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது

kaleelrahman

சோழவந்தான் அருகே 9ஆம் வகுப்பு பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் வடக்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (22). கல்லூரி மாணவரான இவர், மதுரையைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பள்ளி மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததோடு, காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவியை சந்திக்க வேண்டும் எனக்கூறி இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக தனிமையான இடத்திற்கு கடத்திச் சென்று மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மாணவி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டதால் இளைஞர் வீரமணி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இந்நிலையில் மகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து மாணவியின் தாயார் விஜயலெட்சுமி மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சமயநல்லூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார், பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கல்லூரி மாணவர் வீரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.