மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உசிலம்பட்டி நகர் காவல் சார்பு ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின் படி உசிலம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாண்டி கோவில் தெரு பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் குமார், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குமாரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குமார், உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. பள்ளி மாணவர்களின் முழு கவனமும் அவர்களின் படிப்பின் மீதே இருக்க வேண்டும். இதுபோன்று பள்ளி மாணவர்களை போதைப்பொருள் விற்பனை செய்ய யாரேனும் வற்புறுத்தினாலும் அல்லது ஈடுபட தூண்டினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.