குற்றம்

'ஸ்கெட்ச்' போட்ட மதுரை போலீஸ் - அதிரடியாக தடுக்கப்பட்ட ’பழிக்குப் பழி’ கொலை..!

webteam

மதுரையில் கடந்த இரு வருடங்களாக பழிக்குப் பழி கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

முன்விரோதம் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெறும் கொலைகளைத் தடுக்க மதுரை முன்னாள் மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இருந்த போதிலும் அவ்வப்போது பழிக்குப் பழி கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தன.

தற்போது மதுரையில் புதிய காவல் ஆணையராக பதவியேற்ற பிரேம் ஆனந்த் சின்கா, பழிக்குப் பழியாக நடக்கும் கொலை சம்பவங்களை தடுப்பதற்கு தனி படையினரை அமைத்துள்ளார். இந்த தனிப்படையினர் மதுரை மாநகரில் கடந்த சில வருடங்களாக நடந்த கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் மற்றும் ரவுடிகளுக்கு இடையே நடைபெற்ற கோஷ்டி மோதல்கள் குறித்த விவரங்களை சேகரித்து வந்தனர்.

இந்நிலையில் செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற முத்துக்குமார் மற்றும் பைனா மணி என்ற மாரிமுத்து ஆகிய இருவரும் பயங்கர ஆயுதங்களுடன் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்த காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி தலைமையிலான தனிப்படையினர், அவர்களிடமிருந்து கத்தி, வாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் நடத்திய விசாரணையில், முத்துக்குமார் மதுரை மதிச்சியம் காவல்நிலைய பகுதியில் 2014ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்ய முயன்ற போது, வெட்டுக்காயம் அடைந்த அந்நபர் உயிர் தப்பியதாக தெரிவித்தார். இந்நிலையில் அவர் முத்துக்குமாரை கொலை செய்து விடலாம் என்ற அச்சத்தில், தன்னை தற்காத்துக் கொள்ள மீண்டும் அந்த நபரை கொலையும் முயற்சியில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. தனிப்படையினர் விரைந்து செயல்பட்டதன் காரணமாக மதுரையில் நடக்க இருந்த ஒரு கொலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.