கொலை செய்தவர், கொலை செய்யப்பட்டவர்
கொலை செய்தவர், கொலை செய்யப்பட்டவர் PT
குற்றம்

மதுரை: ஒருதலைக்காதலால் கொடூரம்.. பெண்ணின் தந்தையென நினைத்து வேறொருவரை கொலை செய்த இளைஞர்கள்

PT WEB

மதுரை மாநகராட்சி மேயரின் வீட்டின் அருகேயுள்ள யோகனந்தசுவாமி மடம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர்கள் பொங்குடி - பாண்டியம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருந்த நிலையில் இருவருக்கும் திருமணமாகி, அதேபகுதியில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென பொங்குடியின் வீட்டிற்கு வந்த இரு இளைஞர்கள், தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை வெட்டிப்படுகொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் முதியவர் பொங்குடியை படுகொலை செய்ததாக மதுரை மாநகர் HMS காலனி ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்த முத்தமிழன் (19) மற்றும் கோச்சடை பல்வண்ணதேவர் தெரு பகுதியை சேர்ந்த அருணாச்சாலம் (19) ஆகிய இரு இளைஞர்களை கரிமேடு காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது இருவரும் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதன்படி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரான முத்தமிழன், முதியவர் பொங்குடியின் வீட்டின் அருகேயுள்ள பெண் ஒருவரை ஒருதலையாக காதலிப்பதாக கூறி தினசரி பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முத்தமிழனை பொதுவெளியில் வைத்து கண்டித்துள்ளனர்.

கொலை

இதனால், அப்பெண்ணின் தந்தையை பழிவாங்குவதற்காக அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார் முத்தமிழன். இதற்காக முத்தமிழன் தனது நண்பரான அருணாச்சலம் என்பவருடன் சேர்ந்து நேற்று மதியம் அந்த பெண்ணின் தந்தையை தேடி கரிமேடு யோகனந்தசுவாமி மடம் தெற்கு தெரு பகுதிக்கு சென்றதாகவும் தெரிகிறது. இவர்களில் முதலில் அருணாச்சலம் காம்பவுண்ட் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துவிட்டு தவறுதலாக பொங்குடியின் வீட்டுக்கதவை தட்டியுள்ளார். அப்போது அவரது மனைவி பாண்டியம்மாள் யார் என கேட்டபோது “இது மோதிலால் தெருதானே” என கேட்டிருக்கிறார். இல்லை என பாண்டியம்மாள் பதில் அளித்தவுடன் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து அருணாச்சலம் முத்தமிழனிடம் பொங்குடியை குறிப்பிட்டு, “நீ காதலித்த பெண்ணின் தந்தை இந்த வீட்டிற்குள் இருக்கிறார்” என கூறியதாக தெரிகிறது. பின் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் முத்தமிழன் மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரும் போதையில் பொங்குடியின் வீட்டிற்குள் சென்று சேரில் அமர்ந்திருந்த பொங்குடியை சரமாரியாக வெட்டியதாகவும் கூறியுள்ளனர்.

வெட்டிய பின்னர்தான் ஆள்மாற்றி கொலை செய்தது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதன்பின்னரே அங்கிருந்து தப்பியோடிதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.