குற்றம்

மதுரை: ஏடிஎம்-க்கு வரும் வயதானவர்களை குறிவைத்து நூதன திருட்டு - இளம்பெண் கைது

kaleelrahman

மதுரையில் நூதன முறையில் ஏ.டி.எம் மையத்திற்கு வரும் வயதானவர்களை ஏமாற்றி பணத்தை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாநகர் அண்ணாநகர், கே.கே.நகர், தல்லாகுளம் பகுதிகளில் ஏடிஎம் மையங்களுக்கு வரும் வயதானவர்களிடம் பணத்தை எடுத்து தர உதவுவதாகக் கூறி அவர்களின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை திருடுவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது.

இதனையடுத்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஏடிஎம் மையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வ செய்து பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் முடிவில் முதியவர்களிடம் நூதன முறையில் பேசி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை திருடியதாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் மணிமேகலை என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அப்பெண்ணிடம் இருந்து 65 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஒரு தங்கச்செயினை பறிமுதல் செய்த காவல்துறையினர் மதுரை தவிர்த்து வேறு மாவட்டங்களில் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.