குற்றம்

மதுரை: போலீசார் முன்னிலையிலேயே திமுக பிரமுகர் மீது தாக்குதல்; அதிமுக பிரமுகர் மீது வழக்கு

kaleelrahman

திமுக பிரமுகரை அடித்துக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை விரகனூர் மகாராஜன் நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பிரபு (37). திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச்சேர்ந்த இவருக்கு, கடந்த 8-ஆம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் குட்டி (எ) தங்கராஜா என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, 'உன் அப்பாவை ஊராட்சி மன்றத் தலைவர் ஆக்கியதே நாங்கள் தான், அப்படி இருக்கையில் தேவை இல்லாமல் நான் வாங்க நினைக்கும் இடத்தின் பிரச்னையில் தலையிடும் அளவிற்கு நீ பெரிய ஆளா!’ என்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

தொடர்ந்து நேரடியாக பிரபு வீட்டிற்குச் சென்ற தங்கராஜா மற்றும் அவரது மாமனார் வைத்தியநாதன், மைத்துனர் வெற்றிவேல் ஆகியோர் சந்திரன் மற்றும் பிரபுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு பிரபுவை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது. பின்னர் ஆட்களை அழைத்து வருவதாக கூறிய தங்கராஜா கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரபு, சிலைமான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசார் முன்னிலையிலேயே ஐந்து கார்களில் வந்த சுமார் 30 பேர் கொண்ட கும்பல் பிரபு மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதனைத்தொடர்ந்து உயிருக்கு பயந்த பிரபு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து பிரபு அளித்த புகாரின் அடிப்படையில் தங்கராஜா உள்ளிட்ட 20 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.