குற்றம்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை

Sinekadhara

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதுரை ஹோட்டலில் இட்லி மாஸ்டராக பணிபுரிந்த நெல்லையைச் சேர்ந்த பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சின்ன மூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இட்லி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு இவர் ஹோட்டலில் வேலையை முடித்துவிட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்பொழுது அங்கு நெல்லையைச் சேர்ந்த ஒரு மூதாட்டியும் , மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் இருந்திருக்கின்றனர். அவர்கள் மகளின் மனநல சிகிச்சைக்காக நெல்லையிலிருந்து மதுரை வந்துவிட்டு பின்னர் ரயிலுக்காக இரவு நேரத்தில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த பாலமுருகன், நானும் நெல்லைதான் மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்து இருவரும் பேசி உள்ளனர். அவர்களுக்கு பாலமுருகன், தேநீர் வாங்கி கொடுத்துள்ளார். அதன்பிறகு மூதாட்டி உறங்கிய பிறகு, மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வன்கொடுமை செய்தது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து மூதாட்டி, திலகர் திடல் காவல் நிலையம்தில் புகார் செய்தார். அனைத்து மகளிர் போலீசார் புகாரின்பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரை ஹோட்டலில் வேலைபார்த்த இட்லி மாஸ்டர் பாலமுருகன், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம் பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.