மதுரையில் நீதிமன்ற வாசலில் சிறைக் கைதிக்கு போதை மாத்திரை வழங்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்காக அவ்வப்போது கைதிகளை காவல்துறையினர் பலத்த பாதுகாப்போடு அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக ரவுடி மாரிமுத்து உள்ளிட்ட 5 கைதிகளை இரண்டாம் நிலை காவலர் காந்தி என்பவர் நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வந்துள்ளார். அப்போது, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்துவிட்டு கைதிகளை அழைத்துக்கொண்டு நீதிமன்ற வாசலில் இருந்து வெளியே சென்றுள்னர்.
அப்போது விசாரணை கைதியான மாரிமுத்துவுக்கு மதுரை மேலப்பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சிந்தனைச் செல்வன் கூட்ட நெரிசலை பயன்படுத்தி போதை மாத்திரைகளை மாரிமுத்து கையில் கொடுத்துள்ளார்.
இதனை கவனித்த காவலர் காந்தி நீதிமன்ற வளாகத்திலேயே இளைஞரை கையும் களவுமாக பிடித்ததோடு அவர் கொடுத்த போதை மாத்திரைகளையும் கைப்பற்றினார்.
தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அண்ணாநகர் காவல்துறையினர் சிந்தனைச் செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.