குற்றம்

வேலியே பயிரை மேய்ந்த அவலம்! பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய காவலர் கைது!

webteam

மதுரையில் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய காவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை, புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விபசார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் பெண் போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இந்நிலையில் அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

நடத்தப்பட்ட விசாரணையில், விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சுமதியிடம் விசாரணை செய்ததில் தனது குடும்பத்தின் வறுமையை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி அய்யர்பங்களாவை அடுத்த சந்தானம் நகரை சேர்ந்த தேவேந்திரன்(49) மற்றும் செல்லூரை சேர்ந்த காசி(42) ஆகியோர் வாடகை வீட்டை அங்கு அமைத்து கொடுத்து தன்னை விபசாரத்தில் தள்ளியதாக கூறினார். மேலும் வெளியே இருந்தும் ஆட்களை அழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தேவேந்தரனிடம் போலீசார் விசாரித்த போது, அவர் மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலர் தேவேந்திரன் மற்றும் காசியை கைது செய்தனர். மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.