குற்றம்

மதுரை: நாயின் வாயில் பச்சிளம் குழந்தையின் தலை - காண்போரை பதைபதைக்க வைத்த சம்பவம்

நிவேதா ஜெகராஜா
மதுரையில் வருமானவரித்துறை அலுவலகத்தின் எதிரே பச்சிளங் குழந்தையின் தலையை நாய் தூக்கிவந்த சம்பத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை பீ.பீ.குளம் வருமானவரித்துறை அலுவலகம் எதிரில் உள்ள இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்காக மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற இளைஞர் சென்றிருக்கிறார். அந்த பகுதியில் அவர் நடந்து சென்ற போது, அந்த பகுதியில் நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது. இதனை பார்த்த அய்யனார் காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் காவல்துறையினர் குழந்தையின் தலையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையின் தலையில் சாக்கடை ஒட்டி இருந்ததால், பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தலை மட்டும் தற்போது கிடைத்துள்ள நிலையில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தை ஏற்கனவே கொலை செய்யப்பட்டு கிடந்ததா அல்லது நாய் குழந்தையின் தலையை கடித்து எடுத்து வந்ததா என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.