Crime
Crime  File picture
குற்றம்

ம.பி: சிறுமி பாலியல் வன்கொடுமை! 7 வருட சிறை தண்டனைக்கு பிறகும் மீண்டும் அதே தவறை செய்த இளைஞர் கைது!

Prakash J

மத்தியப் பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்று 7 ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர், மீண்டும் அதே குற்றத்தைச் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நகரக் காவல் கண்காணிப்பாளர் (CSP) மகேந்திர சிங் சௌஹான், ”மத்தியப் பிரதேசம் சத்னா மாவட்டம், கிருஷ்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் வர்மா. 35 வயது நபரான இவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு, வர்மா மாவட்டத்தில் உள்ள 4 வயது குழந்தை ஒன்றைப் பாலியல் வன்புணர்வு செய்தார். இந்தக் குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில், அவர் ஏழு ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்தார்.

crime against women

பின்னர் அவரது நன்னடத்தை காரணமாக மீதமிருந்த 3 ஆண்டு தண்டனைக் காலத்தை அனுபவிக்காமல் விடுதலை செய்யப்பட்டார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தற்போது மீண்டும் அதே குற்றத்தைச் செய்துள்ளார். நேற்று (ஆகஸ்ட் 16) மீண்டும் ஒரு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார். இதில் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் குடும்பத்தார் அளித்த புகாரின்பேரில் அந்த நபரைக் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 7 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு மீண்டும் அதே தவறை இளைஞர் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருந்துவதற்காகத்தான் சிறைத்தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால், தண்டனைக்கு பிறகு திருந்தாமல் அதேதவறை செய்வது இன்னும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்த சொல்லுகிறது.