குற்றம்

மதுரவாயல்: வீட்டை எழுதிக் கொடுக்க மறுத்த தாய் - ஆத்திரத்தில் வெட்டிக் கொலை செய்த மகன்

webteam

மதுரவாயலில் சொத்துத் தகராறில் தாயை வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரவாயல் அடுத்த சேக் மானியம், தர்மராஜா கோயில் 7-வது தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (80), இவரது மகன் கபாலி(55), இவர், அதே பகுதியில் உள்ள 4-வது தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை தனது தாயின் வீட்டிற்குச் சென்ற கபாலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கபாலி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தாயின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில், மயங்கி விழுந்த சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டில் சென்று பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதையடுத்து கபாலி மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று சரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கபாலியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சரோஜாவிற்கு ஒரு மகன் நான்கு மகள்கள் உள்ள நிலையில், துபாயில் வேலை செய்து வந்த மகன் கபாலி, தற்போது வேலைக்குச் செல்லாமல் தனது இரண்டு மனைவிகளுடன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

சரோஜா தனது சொத்தை அனைவருக்கும் சரி பங்காக பிரித்துக் கொடுத்து விட்டு ஒரு வீட்டல் சரோஜா வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது சரோஜா இருக்கும் வீட்டையும் கேட்டு கபாலி தொந்தரவு செய்து வந்ததுள்ளார். இந்த நிலையில் இன்று மீண்டும் வீட்டிற்கு வந்த கபாலி சரோஜா குடியிருக்கும் வீட்டையும் தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் கபாலி அரிவாளை எடுத்து தாயை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கபாலியை கைது செய்த மதுரவாயல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக மகனே தாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.