குற்றம்

காதல் தோல்வி- ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்த பெண்!

ச. முத்துகிருஷ்ணன்

சென்னை - எண்ணூர் அருகே காதல் தோல்வியின் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து பெண் டெய்லர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் அடுத்த பொன்னேரி சின்ன கவானம் ஜோதிலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கு 23 வயதில் துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார். துர்கா தேவி பொன்னேரியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக 5 வருடங்களுக்கும் மேலாக வேலை பார்த்து வந்த நிலையில், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என்று துர்கா கூறிய நிலையில், பொருளாதார சூழலை காரணம் காட்டி திருமணம் இப்போது திருமணம் செய்ய முடியாது என்று இளைஞன் கூறியுள்ளான். இதையடுத்து இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு காதல் முறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த துர்காதேவி நேற்று மதிய வேளையில் பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார்.

வாசல் அருகே அவர் நின்று கொண்டிருந்ததால் அவர் வேடிக்கை பார்த்தபடி பயணிப்பதாக பிற பயணிகள் நினைத்துள்ளனர். அப்போது எண்ணூர் பாலத்தின் கீழே ஓடும் கொசஸ்தலை ஆற்றில் துர்காதேவி குதித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியான சக பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் எண்ணூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை அடுத்து சுமார் 6 மணி அளவில் கரை ஒதுங்கிய துர்கா தேவியின் உடலை எண்ணூர் போலீசார் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து துர்கா தேவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீங்கள் அல்லது யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி தெரிய வந்தாலோ தயவுசெய்து கீழ்கண்ட ஹெல்ப்லைன் எண்களை தொடர்புகொள்ளலாம்.

தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை உதவி எண்: 104