குற்றம்

ஜோலார்பேட்டை: காதல் விவகாரத்தில் வீட்டிற்கு தீ வைப்பு; 8 பேர் கைது

PT

காதல் விவகாரத்தில்  வீட்டை அடித்து உடைத்து தீ வைத்ததாகக் கூறி 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் என்பவரது மகள் பிரியதர்ஷினி. பிகாம் முடித்துள்ள இவரும் குன்னத்தூர் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் திருப்பதி (லேப் டெக்னீசியன் படித்து முடித்துவிட்டு சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பிய திருப்பதி, நேற்று காலை பிரியதர்ஷினியின் வீட்டுக்கு அருகே சென்று அவரை அழைத்துக் கொண்டு திருமணம் செய்ய சென்றதாகத் தெரிகிறது.

இதை அறிந்த பிரியதர்ஷினியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் 60-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில்  காமராஜபுரம் பகுதிக்குச் சென்று திருப்பதியின் வீட்டை அடித்து உடைத்து வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியில் எடுத்து வந்து வீசி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். உறவினர்கள்  தீ வைத்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியது.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த ஜோலார்பேட்டை போலீசார்  பிரியதர்ஷினியின் தாய் உட்பட 8 பேரை கைது செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்