தருமபுரி மாவட்டம் இருமத்தூரில் அரசு மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் அமோகமாக விற்பனை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.
தருமபுரி - வேலூர் செல்லும் பிரதான சாலையில் இருமத்தூர் அமைந்துள்ளது. இந்த ஊரை மையமாக வைத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நீதிமன்ற உத்தரவால் இந்த பகுதியில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் இருமத்தூரில் உள்ள ஒரு கோழி இறைச்சி கடை மற்றும் ஒரு சில வீடுகளில் அதிகாலை முதலே கூடுதல் விலைக்கு கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மதுபாட்டில்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி, மஞ்சமேடு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக்கிலிருந்து வாங்கி விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
காலை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே ஒவ்வொரு நாளும் 500 மதுபட்டில்களுக்கு மேலாக விற்கப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.