குற்றம்

பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு விவசாயி கொலை

பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு விவசாயி கொலை

webteam

வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த சீயாம்பாடி பகுதியில் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் சரவணன்(45), எழிலரசன்(42), மற்றும் முனியப்பன்(50) . அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி தயாளன். 32 வயதான இவருக்கு பூர்விகமாக விளைநிலம் 2 ஏக்கர் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலையில் சரவணன் ,எழிலரசன் ,மற்றும் முனியப்பன் ஆகிய மூவரும் ஒன்றிணைந்து செங்கல் சூளை போடுவதற்காக தண்ணீர் வேண்டி தயாளன் நிலத்தை ஒட்டி அனுபவித்து வரும் ஓடைப்புறம்போக்கு நிலத்தில் போர்வெல் அமைக்க முயற்சித்துள்ளனர். இதனால் தயாளன் மற்றும் மூவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றி மோதலாக மாறியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த மோதலால் இருவருக்குமிடையே பகை உண்டாகியுள்ளது.

இதன் அடிப்படையில் நேற்று வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தயாளனை சரவணன், எழிலரசன், முனியப்பன் ஆகிய மூவரும் வழிமறித்து பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த அவரை கையை கட்டி விட்டு தனது செங்கல் சூளைக்கு கொண்டு சென்று உருட்டுக் கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் தயாளன் மூளை வெளியே வந்து மிக கொடூரமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து ஊர் மக்கள் வருவதை கண்ட மூவரும் உடனடியாக அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து தகவல் அறிந்த திமிரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.