குற்றம்

குன்றத்தூர்: முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவன் கைது

kaleelrahman

குன்றத்தூரில் முதல் மனைவி இருக்கும் போதே 2-வது திருமணம் செய்து தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டார்.

குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (38), பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த மேத்தா (35), என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே தன்னுடன் வாழ பிடிக்கவில்லை என்று ஜெயபிரகாஷ் கூறி வந்த நிலையில், தன்னை விட்டு சென்று விட்டதாகவும் தனது மாமனார், மாமியார் கொடுமை படுத்தியதால் தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்துத் தருமாறு குன்றத்தூர் போலீசில் மேத்தா புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து சிறுகளத்தூரைச் சேர்ந்த சண்முகபிரியா என்ற பெண்ணும் காணாமல் போனது தெரியவந்தது. இந்நிலையில் இருவரையும் குன்றத்தூர் போலீசார் தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து இருவரையும் கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை மேத்தா அளித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் மற்றும் உடன் வேலை செய்து வந்த சண்முகபிரியா ஆகிய இருவரையும் கண்டு பிடித்தனர். இவர்களிடம் போலீசார் விசாரித்தபோது சண்முகபிரியாவை ஜெயபிரகாஷ் திருமணம் செய்து ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

மேலும் முதல் மனைவி இருக்கும் போதே அவருக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஜெயபிரகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தன்னை வரதட்சனை கொடுமை செய்ததாகவும் மேத்தா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஜெயபிரகாஷ் அவரது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் என 10 பேர் மீது குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரகாஷை கைது செய்தனர்.