குற்றம்

கோவில்பட்டி: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை! முன் விரோதம் காரணமா என விசாரணை

webteam

கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் விவசாய வேலைக்காக சென்ற பொன்ராஜ் தனது தொழுவில் அமர்ந்து இருக்கும் போது, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சரமாரியமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பொன்ராஜ் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ், கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தில் ஒரு சிலருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதனால் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது தேர்தல் முன் விரோதமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.