குற்றம்

பக்கவாதத்துக்கு வைத்தியம் பார்க்க சென்ற பெண் - 3 மாதமாக நடந்த கொடூரம்; கேரள வைத்தியர் கைது

webteam

உடல்நிலை பாதிக்கப்பட்ட கூடலூர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கேரள வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர், தனது பதினைந்தாவது வயதில் பக்கவாதம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். பெண்ணின் உறவினர்கள் கடந்த ஜூன் மாதம் அவரை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள நிலம்பூர் பகுதியில் கோபாலன் என்னும் வைத்தியரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். வைத்தியர் கோபாலன் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த 3 மாதங்களாக தனது வீட்டில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண்ணை கூடலூரில் வந்து வைத்தியர் கோபாலன் விட்டு சென்றுள்ளார். உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாத பெண்ணிடம் உறவினர்கள் விசாரித்த போது கடந்த மூன்று மாதங்களாக வைத்தியர் கோபாலன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருக்கிறார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கேரளாவைச் சேர்ந்த வைத்தியர் கோபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.