குற்றம்

ரேப் பண்ண முயற்சி செஞ்ச சாமியாருக்கு பெண் வழங்கிய வினோத தண்டனை

ரேப் பண்ண முயற்சி செஞ்ச சாமியாருக்கு பெண் வழங்கிய வினோத தண்டனை

Rasus

கேரள மாநிலம் பெடாவில் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டினாள் பாதிக்கப்பட்ட பெண். சாமியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பெடாவில் சட்டம்பி சுவாமி ஆசிரமத்தைச் சேர்ந்தவர் ஹரிஸ்வாமி. 54 வயதான இந்த சாமியார் 23 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரத்தில் அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள கத்தியை எடுத்து அவரது ஆணுறுப்பை வெட்டியிருக்கிறார். இதனால் படுகாயமடைந்த சாமியார் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஹரிஸ்வாமி அந்தப் பெண் 12ம் வகுப்புப் படிக்கும் போதில் இருந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் குறித்துக் கருத்துக் கூறிய சட்டம்பி ஸ்வாமி ஆசிரம நிர்வாகிகள், ஹரிஸ்வாமி 15 வருடத்திற்கு முன் பிரம்மச்சாரியாக இங்கு இருந்தார். அதன்பிறகு ஆசிரமத்தை விட்டு வெளியேறி விட்டார். அவருக்கும் ஆசிரமத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனது பிரபலத்திற்காக இந்த ஆசிரமத்தின் பெயரை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்று கூறினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை நோய்வாய்ப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் அம்மாதான் குடும்பக் கஷ்டம் போக வேண்டும் என்பதற்காக ஹரிஸ்வாமியை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து பூஜை செய்யச் சொல்லி இருக்கிறார். அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சாமியார் அந்தப் பெண்ணிடம் அத்து மீறியிருக்கிறார். 12ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து சாமியார் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அந்தப் பெண் போலீசில் புகார் கூறியிருக்கிறார். பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் சாமியார் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் செய்யத் தூண்டியதாக அந்தப் பெண்ணின் அம்மா மீதும் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பிருக்கிறது என போலீசார் தெரிவித்தனர்.

சாமியார் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் கூறுகையில், அவருக்கு காயம் பட்ட இடத்தில் ரத்தப் போக்கை நிறுத்தவும் சிறுநீர்ப் பாதையை சரி செய்யவும் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும், அது மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.