குற்றம்

தலைமறைவாக இருந்த தமிழக இளைஞரை கைது செய்த கேரள போலீசார்

kaleelrahman

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தமிழகத்தில் தலைமறைவாக இருந்த இளைஞரை கேரளா போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ளது காடையாம்பட்டி தாலுகா. அங்குள்ள மாட்டுக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கதிர்வேல். கேரளாவில் கட்டிட வேலை செய்து வந்த இவர், கொல்லம் மாவட்டத்தில் உள்ள செம்பகச்சேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கொல்லம் சித்ரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் இளைஞர் கதிர்வேல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த கதிர்வேல், கேரள மாநிலத்தில் இருந்து தப்பித்து, தனது சொந்த ஊரில் மறைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கேரள போலீசார் அவரது செல்போன் எண்ணை கண்டுபிடித்து, டவர் சிக்னலை கொண்டு கதிர்வேல் பண்ணப்பட்டி கிராமத்தில் இருப்பதை தெரிந்து கொண்டனர்.

இதையடுத்து தமிழகம் வந்த கேரளா போலீசார், தீவட்டிப்பட்டி காவல் நிலையம் சென்று அவர்கள் உதவியுடன் தேடிபார்த்தனர். அப்போது ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த கதிர்வேலை சுற்றிவளைத்த போலீசார், அவரை கைது செய்து கேரளா அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.