செய்தியாளர்: ரா.சிவபிரசாத்
பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் அரசு பேருந்து இன்று வழக்கம் போல காலை 5.50 மணிக்கு புறப்பட்டது. இந்தப் பேருந்தில் ஓட்டுநர் கார்த்திக், நடத்துநர் ராம்குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த ஒருவர் வைத்திருந்த பையில் சந்தேகத்திற்கிடமாக ஐந்து காக்கி நிற பொட்டலங்கள் இருந்துள்ளன. இதைக் கண்ட நடத்துநர், உடனே ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்த அறிவுறுத்தினர்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்நபர் ஜன்னல் வழியே குதித்து தப்ப முயன்றுள்ளார். அவர், கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்ட நிலையில், பேருந்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பேருந்து ஊழியர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவலர்கள் கஞ்சா கடத்தி வந்த பாலக்காடு பகுதியைச் சேர்ந்த காஜா உசேன் (45) என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து 17,800 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் காஜா உசேனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அவர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்து ஊழியர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.