குற்றம்

டெல்லியில் மீண்டும் ஒரு கூட்டுப்பாலியல் வன்கொடுமை

webteam

கென்ய நாட்டைச் சேர்ந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கென்ய நாட்டைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், டெல்லியில் வேலைபார்த்து வருகிறார். தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சத்தர்புரா பகுதியில் தங்கியிருந்து வேலைக்குச் செல்வது வழக்கம். புதன்கிழமை இரவு குருகிராமில் நண்பர்கள் வைத்த பார்ட்டியில் கலந்து கொண்டார். பின்னர் வீட்டுக்குச் செல்வதற்காக, எம்.ஜி.சாலையில் உள்ள பிரிஸ்டல் சாக்கில் வாடகை காருக்காகக் காத்திருந்தார். 

அப்போது அவர் அருகே, ஒரு சொகுசு கார் வந்து நின்றது. அதில் மூன்று பேர் இருந்தனர். ‘எங்க போகணும். நாங்க ட்ராப் பண்றோம்’ என்றனர். நேரம் ஆகிக் கொண்டே சென்றதால் வாடகைக் காரும் வராததால் , அவர்களை நம்பி அந்தக் கென்ய பெண், ஏறினார். காருக்குள் ஏறியதும் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர். பின்னர் சிறிது தூரம் சென்றதும் அவர்களின் இரண்டு நண்பகள் காரில் ஏறிக்கொண்டனர். அனைவரும் மதுபோதையில் இருந்தனர். 

பின்னர் மறைவான ஓர் இடத்தில் காரை நிறுத்தி அவர்கள் அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், இதை போலீஸிடம் சொன்னால், கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்ட அந்த கென்ய பெண், கார் நம்பரை குறித்துக்கொண்டார். பின்னர் போலீசுக்கு போன் செய்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொடுத்த கார் நம்பரை வைத்து, சுந்தர், மோகித், பர்வீன் ஆகியோரை கைது செய்தனர். இன்னும் 2 பேரை குருகிராம் போலீசார் தேடி வருகிறனர்.