குற்றம்

வீச்சருவாளுடன் டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்! கரூரில் பரபரப்பு

webteam

கரூர் அருகே டாஸ்மாக் பாரில் ஒருவர் வீச்சருவாளுடன் அங்கிருந்த ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டி, பணம் தராத டாஸ்மாக் ஊழியர்களை வீச்சருவாளின் பின்பக்கத்தால் தாக்கி தப்பியோடிய வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை அடுத்த ஆத்தூரில் டாஸ்மாக் மதுபான கடையும், அதை ஒட்டிய பாரும் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த பாருக்கு சென்ற இளைஞர்கள் 3 பேர், பாரில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுக்கவே நீண்ட வாளை எடுத்து வந்து அதில் ஒரு இளைஞர் அவரை தாக்க முற்பட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த மற்ற ஊழியர்கள் அதனை தட்டிக் கேட்க முற்பட்ட போது, அவர்களையும் அந்த வாள் வைத்திருந்த நபர், வாளை பின்பக்கமாக திருப்பிப் பிடித்து தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் அங்கு பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.