குற்றம்

காரைக்குடி: தனியார் ஊழியர்களை பட்டா கத்தியால் தாக்கி 11 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது

webteam

காரைக்குடி அருகே தனியார் நிறுவன ஊழியர்களை வீச்சருவாளால் தாக்கி 11 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் 3 பேரை கைது செய்துள்ளனர் காவல்துறை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வருபவர் விக்னேஷ். இவர் கடந்த 6ஆம் தேதி கல்லல், புதுவயல், கண்டனூர் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, பொருட்களை விநியோகம் செய்து விட்டு, வசூல் பணத்துடன் காரைக்குடி நோக்கி நிறுவனத்தின் சரக்கு வாகனத்தில் திரும்பியுள்ளார். வாகனத்தை தமிழரசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் வாகனம் காரைக்குடியை அடுத்த கோட்டையூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென காரில் வந்து வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல், விக்னேஷ் தமிழரசன் ஆகிய இருவரையும் பட்டா கத்தியால் வெட்டி விட்டு, அவர்கள் வைத்திருந்த 11 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

தப்பி சென்ற நபர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று கரூர் வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், கிருஷ்ணகுமார் மற்றும் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த அன்வர்சலாம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து கார் மற்றும் 65,000 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.