குற்றம்

கன்னியாகுமரி: வாக்குவாதத்தில் பெண்ணை கத்தியால் வெட்டிய 3 பேர் கொண்ட கும்பல்.!

webteam

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் பெண் ஒருவரை தாக்கி கத்தியால் வெட்டும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், தலைமறைவாக இருக்கும் அவர்களை குளச்சல் போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாய் ஓய்வு பெற்ற காவலரின் மனைவியான இவரது வீட்டின் மதில் சுவர் வழியாக பக்கத்து வீட்டை சேர்ந்த மோகன் என்பவர் மின் கம்பம் அமைத்து மின் இணைப்பு பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை தங்கபாய் வீட்டில் மதில் சுவர் மீது ஏறி மோகன் தரப்பு மின் வயர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு தங்கபாய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த மோகன் அவரது மகன்கள் டார்வின், ஸ்டாலின் ஆகியோர் சேர்ந்து தங்கபாய்-ஐ சரமாரியாக தாக்கியதோடு கையில் இருந்த ஒயர் வெட்டும் கத்தியால் அவரது கையிலும் வெட்டியுள்ளனர். இதில் தங்கபாய் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்த குளச்சல் போலீசார், புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர்களை தேடி வருகின்றனர். 

இந்நிலையில் பிரச்னை செய்து அந்த பெண்ணை 3 பேரும் தாக்கி கத்தியால் வெட்டும் பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.