குற்றம்

கன்னியாகுமரி: சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!

webteam

கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்த, 68 வயது முதியவருக்கு நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டபடி 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் பரமசிவன் (வயது 68). இவர் கடந்த 3-9-2017 அன்று 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற பரமசிவன், ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று இந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் நடந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.



இந்த நிலையில் வெளியே சென்றிருந்த சிறுமியின் தாயார் வீட்டுக்கு வந்தநிலையில், விவரம் தெரியவே சம்பவம் குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரமசிவனை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட முதியவர் பரமசிவனுக்கு சிறுமியை பாலியல் கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தனர்.

மேலும் அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.