குற்றம்

கள்ளக்குறிச்சி: சமையல் பாத்திரக்கடை உரிமையாளர் வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை

kaleelrahman

கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து சமையல் பாத்திரக்கடை உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் கடந்த பத்து வருடமாக கொங்குராயபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சமையல் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீடு திரும்பிய நாராயணசாமி வீட்டுக்கு வந்தவுடன் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து நாராயணசாமியை சரமாரியாக வெட்டியதில் நாராயணசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தபோது நாராயணசாமி சாலையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து ஊர் பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நாராயணசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நாராயணசாமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - வேப்பூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ராஜலட்சுமி, திரிமேனி, பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார், கொலை நடைபெற்ற இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.